Saturday, June 13, 2009

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி...

தமிழ்நாட்டில் முதன்முறையாக துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டு அதில் முதல்வர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அமர்த்தப்பட்டுள்ளார். இதுபற்றிய பத்திரிகை பேட்டியின்போது, குடும்ப வாரிசுகள் பதவி பெறுவது ஒன்றும் புதிதல்ல, காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, அவரது மகன் பரூக், பேரன் உமர் அப்துல்லா வரை பதவி பெற்றுள்ளனர் என்றும், தமிழகத்தில்கூட ராஜாஜியின் மகன் சி.ஆர். நரசிம்மன் எம்.பியாக இருந்துள்ளார் எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஸ்டாலினைத் துணை முதல்வர் ஆக்கியதற்கும், தனது குடும்பத்தினரைப் பல்வேறு பதவிகளில் அமர்த்தியதற்கும் ஏற்கெனவே தங்களது குடும்பத்தினரை அரசியலில் புகுத்தி வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொண்டுள்ள தேவ கௌடா, முலாயம் சிங், சரத் பவார், லாலு பிரசாத் போன்ற இக்கால அரசியல் தலைவர்களை அவர் உதாரணம் காட்டியிருக்கலாம். ஆனால் பொது வாழ்வில் நேர்மையையும், தனிவாழ்வில் எளிமையையும், நிர்வாகத்தில் தூய்மையையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த ராஜாஜியின் பெயரை அவர் உபயோகித்திருக்க வேண்டியதில்லை.
சி.ஆர். நரசிம்மன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது 1952 முதல் 1962 வரை. 1952 தேர்தலின்போது ராஜாஜி கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, அரசியலிலிருந்து விலகி இருந்த காலம். அந்தத் தேர்தலில், ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கவர்னர் ஸ்ரீபிரகாசாவின் ஆலோசனையின் பெயரில் குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ராஜாஜியை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதுதான் சரித்திரம்.
அந்தக் காலகட்டத்தில் எம்.பி. டிக்கெட் பெறுவதற்கு கட்சி அலுவலகத்தில் மனு செய்து நேர்காணலில், ""உங்களால் எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்?'' எனக் கேள்வி கேட்கப்பட்டு, பலர் சிபாரிசு செய்து அதன்பின் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் பெறும் நடைமுறை கிடையாது. ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் யார் நின்றால் அப்பகுதியின் பெரியவர்கள் மற்றும் காங்கிரஸôர் விரும்புவார்கள் என்ற தகவல்கள் தரப்பட்டு அதனால் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற எண்ணத்துடன் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
1952 மற்றும் 1957-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு ராஜாஜியின் மகன் நரசிம்மனை கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராகத் தேர்வு செய்தது பெருந்தலைவர் காமராஜர்தான். ராஜாஜியுடன் கடுமையான உள்கட்சி கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர் காமராஜர் என்பது வேறு, கிருஷ்ணகிரி தொகுதிக்கு சரியான வேட்பாளர் தனி மனித நேர்மை, படிப்பறிவு ஆகியவை நிரம்பிய நரசிம்மன்தான் என்பது வேறு என்ற வகையில் உயரிய நடைமுறைகள் வழக்கத்திலிருந்த காலகட்டம் அது.
அதுமட்டுமன்றி, தந்தையும் மகனும் ஒரே வீட்டில் குடியிருந்தபோதும் அவர்களது அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பது அதைவிட சுவாரஸ்யமான விஷயம். 1959-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் சி.ஆர். நரசிம்மன் தனது வீட்டில் முன் அறையில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தபோது அவரது தந்தை ராஜாஜிக்கு ஒரு தந்தி வருகிறது. எம்.ஆர். மசானி, என்.ஜி. ரங்கா ஆகிய இருவரும் அனுப்பிய அந்தத் தந்தியில் தாங்கள் மறுநாள் சென்னை வர இருப்பதாகவும் அச்சமயம் ராஜாஜியை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நரசிம்மனுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள்.
அந்தத் தந்தியை வீட்டின் உள்ளே இருந்த தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு கிருஷ்ணகிரி தொகுதிக்கு பணி நிமித்தம் நரசிம்மன் சென்றுவிடுகிறார். இரண்டு நாள்கள் கழித்து கிருஷ்ணகிரியில் பத்திரிகையைப் புரட்டியபோதுதான் நரசிம்மனுக்குப் புதிதாக சுதந்திரா கட்சி எனும் ஓர் அரசியல் கட்சியைத் தனது தந்தை ராஜாஜி உருவாக்கிய செய்தி தெரிய வருகிறது. அதாவது, ஒரே வீட்டில் குடியிருந்து வரும் தனது மகன் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினர், எம்.பி. என்ற வகையில் காங்கிரûஸ எதிர்த்து கடுமையான அரசியலை நடத்தி வந்த தனது நடவடிக்கைகள் தெரிய வேண்டியதில்லை என்று ராஜாஜியும் கருதினார்.
நரசிம்மனும் சரி, சுதந்திரா கட்சியின் தலைவர்கள் சிலர் அவரை அக்கட்சிக்கு அழைத்தபோது மறுத்துவிட்டார். 1962-ம் ஆண்டில் அவர் அதே கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு திமுக வேட்பாளர் க. ராசாராமிடம் தோல்வியைத் தழுவினார். தமிழகத்தில் காங்கிரஸின் தீவிர எதிர்ப்பாளரான ராஜாஜியின் மகன் எம்.பி. டிக்கெட் பெற்றது காமராஜரினால்தானே தவிர, அவரது தந்தையின் சிபாரிசால் அல்ல. ஆகவே, குடும்ப அரசியலுக்கு மேற்கோளாக ராஜாஜியை முதல்வர் கருணாநிதி சுட்டிக்காட்டி இருப்பது சரியல்ல.
அடுத்து, இன்னொரு சம்பவம். ராஜாஜியின் மற்றொரு மகன் சி.ஆர். கிருஷ்ணசாமி. இந்து பத்திரிகையின் உதவி ஆசிரியர் பணியில் இருந்தார். அப்பொழுதெல்லாம் இரவு பணி முடிந்து ரிக்ஷாவில்தான் அவர் வீட்டிற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் நள்ளிரவு ரிக்ஷா கிடைக்காததால் பொடி நடையாக, மாம்பலம் பசுல்லா சாலையிலுள்ள தங்கள் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார் கிருஷ்ணசாமி.
மவுண்ட்ரோடில் இரவு ரோந்துப் பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரை நிறுத்தி விசாரித்து, சந்தேகத்தின் பேரில் அவரை மவுண்ட் ரோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். வீட்டு விலாசத்தை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் இது முதல்வர் ராஜாஜியின் விலாசம் எனக் கூறி மேலதிகாரியிடம் விசாரிக்க, முதல்வர் மகன் சி.ஆர். கிருஷ்ணசாமி இந்து பத்திரிகை உதவி ஆசிரியர் எனும் உண்மை புலப்பட்டது.
சி.ஆர். கிருஷ்ணசாமி தன்னை "இந்து' பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்று சொல்லிக் கொண்டாரே தவிர, முதல்வரின் மகன் என்று குறிப்பிடவே இல்லை. அந்த சப்-இன்ஸ்பெக்டர் ஏன் முதலிலேயே அந்த உண்மையைக் கூறவில்லை என்று கேட்டபோது, சி.ஆர். கிருஷ்ணசாமி சொன்ன பதில்~ "இந்து' பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்கிற பதவி நிரந்தரமானது. கௌரவமானது. முதல்வரின் மகன் என்பது அப்படியில்லை!'.
சப் இன்ஸ்பெக்டருக்கும், கான்ஸ்டபிளுக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வலியப் போய் வம்பை விலைக்கு வாங்கி விட்டோமோ என்று கருதினர். கிருஷ்ணசாமி மறுத்தும், விடாப்பிடியாக அவரை போலீஸ் ஜீப்பில் முதல்வரின் வீடு வரை கொண்டு போய் விட்டு விட்டு வந்தார் சப்-இன்ஸ்பெக்டர். மாடியில் விழித்திருந்து படித்துக் கொண்டிருந்த முதல்வர் ஜன்னல் வழியே ஒரு போலீஸ் ஜீப்பில் தனது மகன் வந்திறங்கியதைப் பார்த்திருக்கிறார். காலையில் முன்னிரவில் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்து கொண்டு தலைமைச் செயலகம் சென்ற பின் போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து போலீஸ் வாகனத்தை உபயோகிக்க உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என கேட்டிருக்கிறார்.
சந்தேகக் கேஸில் ஸ்டேஷனுக்குப் பிடித்துக் கொண்டு வரப்படும் குற்றவாளி தரத்திலானவர்களை லாக்கப்பில் தள்ளுவதும், தவறாகக் கொண்டு வரப்படும் கண்ணியமானவர்களை நடுநிசியில் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு போலீஸ் ஜீப்பில் கொண்டு போய் விடுவதும் வழக்கத்திலிருக்கும் நடைமுறையே என முதல்வருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
கொள்கை ரீதியாக ராஜாஜியுடன் கடுமையாக மோதிய பெரியார், காமராஜர் போன்றவர்கள்கூட அவரது நேர்மையையும், தன்னலமற்ற பொது வாழ்க்கையையும் சந்தேகித்ததும் இல்லை, குறை கூறியதும் இல்லை. ராஜாஜியின், நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதுதான் முதல்வர் கருணாநிதியின் நோக்கமாக இருக்கும் போலிருக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராயிருந்தபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் அப்துல் மஜீத், அவர் ஒருமுறை அலுவல் நிமித்தம் விருதுநகர் சென்றபோது, காமராஜரின் இல்லத்திற்கு சென்று அன்னை சிவகாமி அம்மையாரை சந்தித்திருக்கிறார். அச்சமயம், காமராஜரின் சகோதரி தண்ணீர்க் குடத்துடன் வந்திருக்கிறார். அமைச்சர் உங்கள் வீட்டிற்கு தனியாக குடிதண்ணீர் இணைப்பு கிடையாதா எனக் கேட்க, இல்லை என்ற பதில் வந்துள்ளது.
அன்றைய நிலையில் தனி வீடுகளுக்கு குடிதண்ணீர் இணைப்பு இல்லாமல் எல்லாருமே பொதுக் குழாய்களில் தெருக்களில் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் நடைமுறையே இருந்தது. விருதுநகர் நகராட்சியில் நிர்வாக ஆய்வு செய்த அமைச்சர், ஆணையரை அழைத்து முதல்வர் காமராஜரின் வீட்டிற்கு ஒரு தனி குடிதண்ணீர் இணைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அடுத்த முறை விருதுநகர் சென்ற காமராஜர் தனது வீட்டிற்கு குடிதண்ணீர் இணைப்பு தரப்பட்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்தார். விவரங்களைக் கேட்டறிந்தார். சென்னை திரும்பிய பின் மஜீத்தை அழைத்து, ""நீங்களே விதியை மீறி ஒரு குடிதண்ணீர் இணைப்பை எங்கள் வீட்டுக்குக் கொடுக்கச் சொன்னது, அதிகாரிகள் இனிமேல் தங்கள் இஷ்டத்திற்கு பல வீடுகளுக்கும் ஹோட்டல்களுக்கும் இணைப்பு கொடுக்க வழிவகுக்கும். இதனால் ஊழலும், தண்ணீர் தட்டுப்பாடும் உண்டாகும். நீங்களே அந்த இணைப்பை அகற்றிவிடச் சொல்லுங்கள்'' எனக் கூறினாராம்.
இதுபோன்று தன்னலமில்லா பொதுத் தொண்டு செய்யும் அரசியல் தலைவர்கள் நம்மிடையே வாழ்ந்த காலம் மாறி தான் தன் குடும்பம் என சுயநலத்தோடு அரசியல் நடத்தும் தலைவர்கள் நாடெங்கிலும் பெருகிவிட்டனர். தியாகத் தலைவர்கள் பற்றி இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும்வகையில் முழுவிவரங்களையும் தெரிவிக்காவிட்டாலும் அவர்களைப் பற்றி தவறான எண்ணம் உருவாகும் வகையில் அரைகுறை தகவலை மட்டும் எடுத்துரைப்பது சரியல்ல!
சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் அப்பழுக்கில்லாத பழைய தலைவர்களை உதாரணம் காட்டுவதன் மூலம் தனது செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முயலும் முதல்வரின் முயற்சிகள் ஏற்புடையதல்ல. இன்றைய தலைமுறைக்குக் கடந்தகால வரலாறு தெரியாது என்கிற தைரியத்தில் முதல்வர் இப்படிக் கூறுகிறாரோ என்னவோ?
- தினமணி கட்டுரை ( 11-06-2009) இருந்து.

Sunday, June 7, 2009

விவசாயியே வெளியேறு!

1942 ""வெள்ளையனே வெளியேறு'' என்ற விடுதலைக் குரல் இந்தியாவில் ஓங்கி ஒலித்ததன் விளைவால் தூங்கிய பாரதம் துணிவுடன் எழுந்தது. விடுதலை பெற்ற இந்தியாவில் இன்று நிகழ்வது என்ன?
ஆட்சியைப் பிடித்தவர்கள் கட்சிகளை மாற்றுகிறார்கள். மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவிக்காக கொள்கைகளைக் குப்பையில் கொட்டியபின்பும் சாயம் வெளுக்காத சில சமரசங்கள் அவர்களுக்குப் பணத்தை அள்ளித் தரலாம்.
எந்தக் கட்சி பதவிக்கு வந்தால் என்ன? யார் ஆண்டால் யாருக்கு என்ன லாபம்? யாராலுமே காப்பாற்ற முடியாத ஒரு கேவல நிலைக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.
ஆண்டுதோறும் விவசாயத்தைக் கைவிட்டு பெருநகரங்களின் சேரிகளில் குவியும் விவசாயிகளின் நிலை ஏறத்தாழ இலங்கை அகதிகளைவிடக் கேவலமாயுள்ளது. விவசாயிகளின் வாரிசுகள் இன்று விவசாயம் செய்யத் தயாராக இல்லை. 1980 - 89 காலகட்டத்தில் 5 ஏக்கர் முதல் 20 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள் 2004 - 05 காலகட்டத்தில் என்ன ஆனார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் திரட்டப்படுமானால் இந்த உண்மை வெட்டவெளிச்சமாகும்.
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் நிலை இன்னமும் மோசம். நகரங்களில் குடிபெயர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவியல் நுட்பம் நன்கு தெரிந்த சிறு - குறு விவசாயிகளாவர். பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு தாமாகவே வாழ்வை முடித்துக்கொண்டு விட்டார்கள்.
அரசுத்தரப்பு புள்ளிவிவர அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திலும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 1993-லிருந்து 2006 வரையில் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஊடகங்களின் தகவல்களின்படி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மூன்று லட்சம்.
2006-லிருந்து 2009 வரையில் மேலும் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்தியாவில் இவ்வளவு அரசியல் கட்சிகள் இருந்தும் எந்த ஒரு கட்சியாவது விவசாயிகளின் தற்கொலையை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஒரு தேசம் தழுவிய மாநாடு கூட்டியோ ஊர்வலம் நடத்தியோ ஏதும் ஒரு பொதுக்கூட்டத்தில் விவாதித்ததா? மாநில அளவிலாவது இந்தப் பிரச்னை விவாதிக்கப்பட்டதா? எதுவுமே செய்யப்படாததன் பொருள் என்ன? திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இந்தியாவில், விவசாயிகளை வெளியேற்றுவதும் ஒரு திட்டக் கொள்கையாக மாறிவிட்டதுதான் பரிதாபகரமான உண்மை நிலை. இது எவ்வாறு என்றால் அமெரிக்கா திட்டமிடுகிறது. அதை இந்தியா நிறைவேற்றுகிறது. அமெரிக்காவில் எவையெல்லாம் நிகழ்ந்தனவோ அவையெல்லாம் இந்தியாவில் நிகழப் போகின்றன.
ஓர் அரசு மேல்மட்ட அதிகாரியையோ, அரசுத்துறை விவசாய விஞ்ஞானியையோ பார்த்து, இந்திய விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டுப் பாருங்கள். ரெடிமேட் பதில்கள் நிறையக் கிடைக்கும்.
உற்பத்தித்திறன் குறைவதால் வருமானம் குறைகிறது. அதனால் தற்கொலை என்பார். விவசாயம் காரணமல்ல. திருமணச் செலவு காரணமாகக் கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கின்றனர். உண்மையை மூடி மறைக்கவே இப்படியெல்லாம் விவசாயத் துறையினர் காரணங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.
பசுமைப்புரட்சி நிகழ்வதற்கு முன் குறிப்பாக 1960 - 69 பதிற்றாண்டில் விவசாய உற்பத்தித் திறன் குறைவாகத்தான் இருந்தது. அன்று எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொண்டதாக எதுவும் செய்தி இல்லையே. அன்றும் விவசாயிகளின் பெண்களுக்குக் கல்யாணக்கடன் இருந்தது. அதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
கடந்த 40 ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தியும் உற்பத்தித்திறனும் பன்மடங்கு உயர்ந்தும் கூட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? கடந்த 40 ஆண்டுகளாக உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற இலக்கு உலகளாவியதாக இருந்தது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா என்று உலகின் எல்லா இடங்களிலும் உற்பத்தியை உயர்த்துவது ஒரு பொதுவான லட்சியமே. வளர்ச்சியுற்ற நாடுகளில் அமெரிக்காவை மாதிரியாகக் கொண்டு இயங்கும் இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று. இரு நாடுகளின் வேளாண்மைப் பொருளியல் ஒப்பிடக்கூடியதும் அல்ல. அமெரிக்காவில் 7 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அமெரிக்காவில் சிறையில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 70 லட்சம். ஒட்டுமொத்த அமெரிக்க சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் 10 சதவீதமே விவசாயிகளின் எண்ணிக்கையாக உள்ளது.
இரண்டாவது உலகப் போருக்கு முன்பு அமெரிக்காவில் 3 கோடி விவசாயிகள் இருந்தனர். அமெரிக்காவில் இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் விவசாயத் தொழிலைக் கார்ப்பரேட் என்ற வர்த்தகக் கூட்டணி கைப்பற்றியது. சுமார் 2.7 கோடி விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றியது. இன்றைய அமெரிக்காவின் விவசாயக் கொள்கை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவன நிகழ்ச்சி நிரலாக மாறிப்போனது.
2000-ம் ஆண்டில் அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கு கடைசியாக எடுக்கப்பட்டபோது வேண்டுமென்றே விவசாயிகளின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தை எடுக்கவில்லை. அமெரிக்காவில் விவசாயிகளின் தொகை சுருங்குவதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இன்று ஐரோப்பாவிலும் விவசாயிகள் அழிந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவிலும் சீனாவிலும் விவசாயிகளின் எண்ணிக்கை இவ்வளவு மோசமாக விவசாயக் கொள்கைகளுக்கு மத்தியில் கணிசமாக உள்ளது. இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 20 கோடி. உலக விவசாயிகளில் 10-க்கு நால்வர் இந்திய விவசாயிகள். இந்தியாவின் விளைநிலம் 139 கோடி ஹெக்டேர். விவசாயியின் சராசரி நில அளவு 1.4 ஹெக்டேர். இந்தியாவுடன் ஒப்பிட்டால் அமெரிக்காவின் சராசரி நில அளவு 2000 மடங்கு கூடுதல். இந்தியாவில் விவசாயம் வாழ்க்கை. அமெரிக்காவில் விவசாயம் வியாபாரம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்காவின் அனுபவம் இந்தியாவுக்கு எப்படிப் பொருந்தும் என்பதே விளங்காத புதிராக உள்ளபோது, இந்தியாவிலும் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறும் எண்ணிக்கை பல கோடிகளைக் கடந்துவிட்டது. குறிப்பாக 1980-க்குப் பின் கிராமங்களைவிட்டு வெளியேறிய சிறு - குறு விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும்.
இந்தியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய உணவு அரிசி. அமெரிக்காவில் அரிசி ஏற்றுமதிச் சரக்கு. ""அமெரிக்காவில் அரிசியின் உற்பத்தித்திறன் 7 டன். இதுவே இந்தியாவில் 3 டன். ஆகவே இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவிலும் ஹெக்டேருக்கு 7 டன் அரிசி விளைவிக்க வேண்டும். இந்த அளவில் இந்திய விவசாயிகள் அரிசி உற்பத்தி செய்தால் போதும். நல்ல லாபம் வரும். நிலத்தைவிட்டு வெளியேற வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்தும் இல்லை. விவசாயப் பிரச்னைகள் எல்லாமே உற்பத்தித் திறனை உயர்த்தினால் போதும்...'' இப்படித்தான் நமது நிபுணர்கள் நினைக்கின்றனர். இது சரியல்ல.
அமெரிக்காவில் மொத்த அரிசி உற்பத்தியின் பணமதிப்பு 1.2 பில்லியன் டாலர். இந்த அளவில் அரிசி உற்பத்தி செய்ய 1.4 பில்லியன் டாலர் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் - ரொக்கமாக இந்த அளவு மானியம் பெறுவதால் 7 டன் உற்பத்தித்திறன் சாத்தியமாகிறது. இந்திய விவசாயிகளுக்கும் இந்த அளவுக்கு மானியம் வழங்குவது சாத்தியமா? இந்த அளவில் மானியம் பெற முடியாத சூழ்நிலையில் நிபுணர்களின் பேச்சைக்கேட்டு அதிகம் முதலீடுகளைக் கொட்டி அதிக உற்பத்தி செய்தும் அதற்கான சந்தையும் விலையும் இல்லாமல் நஷ்டமடைந்து கடனாளியாகி முடிவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுதான் நிஜம்.
நமது விவசாயக் கொள்கை எப்படி உள்ளது என்றால், ""விவசாயிகள் எப்படியாவது கடனை உடனை வாங்கி புதிய முறை விவசாயத்தைக் கடைப்பிடித்து உற்பத்தியை உயர்த்தி முடிவில் விற்க வழியில்லாமல் தற்கொலை செய்து செத்துவிடு அல்லது நிலத்தை வந்த விலைக்குக் கார்ப்பரேட்டுகளிடம் விற்றுவிட்டு வெளியேறு என்று கூறுவதுபோல் உள்ளது''.
ஆமாம். இன்று இந்திய விவசாயத்தில் அமெரிக்காவைப்போல் கார்ப்பரேட்டுகள் நுழைந்துவிட்டனர். இன்று அமெரிக்க உபதேசத்தை வேதமாகக் கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும் அமைச்சர்கள் விவசாயத்தை லாபகரமாக மாற்ற ஏற்றுமதிக்குரிய மாற்றுப்பயிர்த்திட்டத்தை முன்வைக்கின்றனர். கொய்மலர், வெள்ளரிக்காய், கண்வலிக்கிழங்கு, மூலிகைகள் என்ற வரிசையில் பல வகைப் பயிர்கள் உண்டு. இவற்றைப் பயிரிடும் தகுதி உணவு விவசாயம் செய்யும் ஒன்றே முக்கால் ஏக்கர் பேர்வழிகளுக்கு இயலாது. கார்ப்பரேட்டுகள் அல்லது கார்ப்பரேட்டுகளின் பக்கபலம் உள்ள பணக்கார விவசாயிகளுக்கு மட்டுமே லாபம் உண்டு.
ஏற்றுமதி எத்தர்களால் வெள்ளரிக்காய் சாகுபடி செய்து ஏமாந்துபோன விவசாயிகள் திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் உண்டு. அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு தென் அமெரிக்க நாடுகளில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்து கார்ப்பரேட் பயன் அடைந்தார்கள். ஆனால் உணவு உற்பத்தி குறைந்து அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து உயிர் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறு - நடுத்தர விவசாயிகள் வெளியேறி விட்டனர்.
இதேபோக்கு இந்தியாவில் தென்படுகிறது. இந்திய விவசாயிகளின் பாரம்பரிய அறிவைப் புறக்கணித்துவிட்டு அமெரிக்கப் பாரம்பரியத்தை ஏற்கும் நிலை புதிய புதிய நவீன ரசாயன - இயந்திரத் தொழில் நுட்பங்கள் மூலம் அறிமுகமாகி விட்டதால் இந்திய மண்ணில் இனி பாரம்பரிய விவசாயிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
இனி எதிர்காலத்தில் இந்திய விவசாயம் முழுமையாகவே கார்ப்பரேட்டுகளின் வசமாகிவிடும். வேறு வழியில்லாமல் விவசாயிகள் வேகமாக சொந்த மண்ணைவிட்டு உள்ளூர் அகதிகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. - Dinamani katturai paguthiil irunthu....

Tuesday, June 2, 2009

ஐ.நா.வில் நடந்த மனித உரிமை படுகொலை!

சுதந்திரத்தையும், சம உரிமையையும் கோரிப் போராடிய தனது நாட்டு மக்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியும், விமானத்தில் இருந்து குண்டு வீசியும், பெரு நாசம் ஏற்படுத்தும் குண்டுகளை வீசியும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்று குவித்த சிறிலங்க அரசிற்கு மனித உரிமைகளை மேம்படுத்தவும் காப்பாற்றவும் உதவுவோம் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உலகையே ஒரு அதிர்ச்சி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஐ.நா. மனித உரிமை மன்றம்!

21ஆம் நூற்றாண்டில், உலகின் 200க்கும் மேற்பட்ட சுதந்திர நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. அமைப்பில் மனித உரிமைக்கு என்ன மரியாதை உள்ளது என்பதை ஐ.நா.மனித உரிமை மன்றம் சிறிலங்க அரசிற்கு ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானம் மட்டுமே சாட்சியல்ல, அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பேச்சும் அதற்கு அத்தாட்சியாகும்.“விடுதலைப் புலகளுக்கு எதிரான போரை முடித்துவிட்டோம்” என்று கடந்த 18ஆம் தேதி திங்கட்கிழமை சிறிலங்க இராணுவம் அறிவித்த போதே அது எப்படி முடிக்கப்பட்டது என்பது குறித்து உலக நாடுகள் பலவும் அதிர்ச்சி தெரிவித்தன. வன்னிப் பகுதியில் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் 2 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே கொண்ட நிலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தஞ்சமடைந்திருந்த 55,000க்கும் அதிகமான மக்களை சக்தி வாய்ந்த குண்டுகள் வீசி அழித்தொழித்துவிட்டு, விடுதலைப் புலி பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டோம் என்று கூறியது சிறிலங்க இராணுவம்.மறுநாள் அதை நாடாளுமன்றத்தில் அறிவித்தார் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச. போரை முடித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட அந்தக் கணத்தில் இருந்து, இறுதிப் போர் நடந்ததாகக் கூறப்படும் அந்த இடத்தில் இருந்து இதுநாள்வரை ஒரு செய்தியும் உலகத்திற்கு வரவில்லை. சொல்வதற்கு அங்கு சிறிலங்க இராணுவத்தைத் தவிர ஒரு மனிதரைக் கூட விட்டு வைக்கவில்லை. அப்படிப்பட்ட அப்பட்டமான மனிதப் படுகொலை ஒரு சில ஜனநாயக, அணு ஆயுத வல்லரசுகளின் உதவியுடன் கன கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.அந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்த பிறகுதான் சிறிலங்க அரசிற்கு எதிராக போர் குற்றம் புரிந்ததாகவும், இனப் படுகொலை நடத்தியதாகவும், அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச் சாற்றுகள் எழுந்தன.அங்கு நடந்த கோரப் படுகொலையை அமெரிக்கா, ஐ.நா. செயற்கைக் கோள்கள் படம் பிடித்ததாக செய்திகள் வரத் தொடங்கிய பிறகுதான் போர் குற்றத்திற்காக சிறிலங்கா அரசை பொறுப்பாக்க அங்கு பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.

இதனைத் தொடர்ந்தே ஐ.நா. மனித உரிமை மன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று அதன் 47 உறுப்பு நாடுகளில் ஒன்றான ஜெர்மனியும், அதோடு மேலும் 15 நாடுகளும் கோரிக்கை விடுத்தன்.மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கோரிக்கை விடுத்தால் மட்டுமே ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படும். அதன்படி, கடந்த 26ஆம் தேதி செவ்வாய் கிழமை ஜெனிவாவில் அச்சிறப்புக் கூட்டம் கூடியது உலகத் தமிழர்கள் மத்தியிலும், அவர்களின் போராட்டத்தின் காரணமாக இலங்கை இனச் சிக்கல் குறித்து விழுப்புணர்வு பெற்ற ஐரோப்பிய நாட்டினரிடையேயும் ஏற்பட்டது. இதனிடையே வன்னியில் அப்பாவி மக்கள் தஞ்சமடைந்துள்ள பாதுகாப்பு வலயப் பகுதி மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று அளித்த உறுதி மொழியைத் தாண்டி, பொது மக்களை குறிவைத்து சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியதற்கான செயற்கைக் கோள் படங்கள் (ஐ.நா.வின் செயற்கைக் கோள் எடுத்தது) ஊடகங்களில் வந்தது.இந்தப் பின்னணியில் கூடிய ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில், அதற்குக் கோரிக்கை விடுத்த நாடுகளின் (Special procedures mandate holders) சார்பாக சுவிட்சர்லாந்து முன்மொழிந்த தீர்மானம் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இறுதிப் போர் நடந்தபோது அதில் கொல்லப்பட்ட அப்பாவிகள் எத்தனை ஆயிரம் பேர் என்றோ, காயமுற்றவர்கள் எத்தனை ஆயிரம் பேர் என்றோ, கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்தோ அல்லது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி மே 18ஆம் தேதி காலையில் நடத்திய மனிதப் படுகொலை குறித்தோ அல்லது அன்று நடந்த போர் குற்றம் குறித்தோ அந்தத் தீர்மானத்தில் ஏதும் இல்லை.மாறாக, போர் முடிவிற்கு வந்ததற்காக சிறிலங்க அரசிற்கு பாராட்டும், பாதுகாப்பு வலயத்தில் இருந்த மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று விடுதலைப் புலிகளின் மீது குற்றச்சாற்றும்தான் இருந்தது.அதைவிட வேடிக்கை என்னவெனில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் போர் விதிகள் மீறலோ அல்லது மனித உரிமை மீறலோ நடந்ததாக வரும் குற்றச் சாற்றுகள் மீது சிறிலங்க அரசே விசாரணை நடத்தி அதற்குக் காரணமானவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்று அத்தீர்மானத்தின் 12வது கோரிக்கை அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்தது.

போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த சிறிலங்க அரசே அதற்குக் காரணமானவர்களை விசாரணை நடத்தி கண்டுபிடித்து (!) பொறுப்பாக்க வேண்டுமாம்! எப்படியிருக்கிறது நாடகம்!சிறிலங்க அரசே தன் மீது விசாரணை நடத்திக் கொள்ள எதற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தை சிறப்பாக கூட்ட வேண்டும்?சுவிட்சர்லாந்து முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை படித்த அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் பிராண்சிஸ் பாய்ல் (இவர் சர்வதேச, மனித உரிமை சட்டங்களில் வல்லுனர்), “இப்படிப்பட்ட கொள்கையற்ற, வெட்கமில்லாத ஒரு தீர்மானத்தை ஐ.நா.வின் எந்த ஒரு அமைப்பும் அதன் வரலாற்றில் நிறைவேற்றியதில்லை” என்று கூறிவிட்டு, “இரண்டாவது உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப் படுகொலை தொடர்பாக ஹிட்லரே விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தால் அது எவ்வளவு பெரிய பித்தலாட்டமாக இருந்திருக்குமோ அதுவே இங்கு நடைபெறுகிறது” என்றும் விமர்ச்சித்தவர் ஜெனிவாவிலிருந்தே வெளியேறினார்.ஆயினும் இந்த அளவிற்கு சிறிலங்க அரசை குற்றம் சாற்றாத ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற விடாமல் தோற்கடித்த இந்திய, சீன, இரஷ்ய நாடுகள், சிறிலங்கா தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு முன்மொழிந்த ஒரு தீர்மானத்தை மிகவும் பாராட்டி அதனை 29க்கு 12 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றின.இந்த இரு தீர்மானங்களின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பேச்சு, இவர்கள் பிரச்சனைகளை புரிந்துதான் பேசுகிறார்களே அல்லது இவையாவும் முன் திட்டமிடப்பட்ட நாடகமா? என்ற சந்தேகத்தை எழுப்பியது.“இக்கூட்டத்தில் தனது நாட்டு அமைச்சரையே பங்கேற்கச் செய்ததன் மூலம் மனித உரிமை காப்பதில் தங்களுக்குள்ள உறுதிப்பாட்டினை சிறிலங்க அரசு மெய்பித்துள்ளது” என்று பல நாடுகள் பாராட்டின.


இந்த சிறப்புக் கூட்டத்தைத் துவக்கிவைத்து (வீடியோ காண்பரன்சிங் மூலம்) உரையாற்றிய ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, “கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து அங்கு நடந்த கடும் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர், காயமுற்றுள்ளனர் அல்லது இடம் பெயரச் செய்யப்பட்டுள்ளனர். போர் பகுதியில் இருந்து வெளியேறிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் முகத்தில் தெரிந்த அச்சமும், சக்தி முழுவதையும் இழந்த நிலையும் நமது நினைவுகளை விட்டு நீங்காதவை, அந்த காட்சிகள் நம்மை என்ன செய்ய வேண்டுமோ அதனை நோக்கி நம்மைத் தள்ளட்டும்” என்று கூறியவர், இலங்கையில் நடந்த போரில் இரு தரப்பினரும் அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளில் அத்துமீறியுள்ளார்கள் என்று நம்புவதற்கு இடமளிக்கிறது. எனவே, சுதந்திரமான ஒரு பன்னாட்டு புலனாய்வை நடத்தி மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு பொறுப்பாக்க வேண்டு்ம்” என்று பேசினார்.ஆனால், இப்படி எந்த ஒரு நாட்டின் பிரதிநிதியும் பேசவில்லை. நவி பிள்ளை பேசியது போல் அப்படியெல்லாம் இலங்கையில் ஏதும் நடக்கவில்லை என்று நம்பியவர்களைப் போலவே பேசினர்.இன்றுள்ள நிலையில் சிறிலங்க அரசிற்கு உரிய உதவிகளைச் செய்து அது சந்தித்துவரும் அகதிகள் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிட வேண்டுமே தவிர, இந்தச் சிறப்புக் கூட்டமெல்லாம் தேவையற்றது என்று இந்தியாவின் பிரதிநிதி பேசினார்! பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைக்கு அனைத்து உதவிகளையும் செய்த நாடுகளான இந்தியாவும், சீனாவும், இரஷ்யாவும் தங்களுடைய பன்னாட்டு நட்பு நாடுகளை ஆதரவாக்கிக் கொண்டு, மனித உரிமைகளையும், நாகரீக நடைமுறைகளையும் துவம்சம் செய்துவரும் சிறிலங்க அரசிற்கு மனித உரிமை காப்பாளர் என்ற நற்சான்றிதழை பெற்றுத் தருவதில் வெற்றி பெற்றுள்ளன.இந்தச் சிறப்புக் கூட்டம் எதைச் செய்திருக்க வேண்டுமோ அதைச் செய்யத் தவறியது, மானுடத்தின் உன்னத மாண்புகளை ஆழ குழிதோண்டி புதைத்த ஒரு அரசை தங்கள் நட்புறவைக் கொண்டு காப்பாற்றி விட்டுள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு நடந்த ஒரு மாபெரும் மனிதப் படுகொலையை மறைக்கும் முயற்சியில் இந்த நாடுகள் வெற்றி பெற்றதாகக் கருதலாம். ஆனால் அவர்களின் இந்த மானுட துரோகம் ஒரு நாள் தலையெடுக்கும்.இரத்தத்தோடு புதைக்கப்பட்ட உண்மை எதுவும் சாவதில்லை, மீண்டும் எழும்.

- வெப் உலகம் கட்டுரைகள்