தமிழ்நாட்டில் முதன்முறையாக துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டு அதில் முதல்வர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அமர்த்தப்பட்டுள்ளார். இதுபற்றிய பத்திரிகை பேட்டியின்போது, குடும்ப வாரிசுகள் பதவி பெறுவது ஒன்றும் புதிதல்ல, காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, அவரது மகன் பரூக், பேரன் உமர் அப்துல்லா வரை பதவி பெற்றுள்ளனர் என்றும், தமிழகத்தில்கூட ராஜாஜியின் மகன் சி.ஆர். நரசிம்மன் எம்.பியாக இருந்துள்ளார் எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஸ்டாலினைத் துணை முதல்வர் ஆக்கியதற்கும், தனது குடும்பத்தினரைப் பல்வேறு பதவிகளில் அமர்த்தியதற்கும் ஏற்கெனவே தங்களது குடும்பத்தினரை அரசியலில் புகுத்தி வசதி வாய்ப்பைப் பெருக்கிக் கொண்டுள்ள தேவ கௌடா, முலாயம் சிங், சரத் பவார், லாலு பிரசாத் போன்ற இக்கால அரசியல் தலைவர்களை அவர் உதாரணம் காட்டியிருக்கலாம். ஆனால் பொது வாழ்வில் நேர்மையையும், தனிவாழ்வில் எளிமையையும், நிர்வாகத்தில் தூய்மையையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த ராஜாஜியின் பெயரை அவர் உபயோகித்திருக்க வேண்டியதில்லை.
சி.ஆர். நரசிம்மன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது 1952 முதல் 1962 வரை. 1952 தேர்தலின்போது ராஜாஜி கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, அரசியலிலிருந்து விலகி இருந்த காலம். அந்தத் தேர்தலில், ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கவர்னர் ஸ்ரீபிரகாசாவின் ஆலோசனையின் பெயரில் குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ராஜாஜியை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதுதான் சரித்திரம்.
அந்தக் காலகட்டத்தில் எம்.பி. டிக்கெட் பெறுவதற்கு கட்சி அலுவலகத்தில் மனு செய்து நேர்காணலில், ""உங்களால் எவ்வளவு பணம் செலவு செய்ய முடியும்?'' எனக் கேள்வி கேட்கப்பட்டு, பலர் சிபாரிசு செய்து அதன்பின் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் பெறும் நடைமுறை கிடையாது. ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் யார் நின்றால் அப்பகுதியின் பெரியவர்கள் மற்றும் காங்கிரஸôர் விரும்புவார்கள் என்ற தகவல்கள் தரப்பட்டு அதனால் வெற்றி வாய்ப்பு உண்டு என்ற எண்ணத்துடன் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
1952 மற்றும் 1957-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு ராஜாஜியின் மகன் நரசிம்மனை கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராகத் தேர்வு செய்தது பெருந்தலைவர் காமராஜர்தான். ராஜாஜியுடன் கடுமையான உள்கட்சி கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர் காமராஜர் என்பது வேறு, கிருஷ்ணகிரி தொகுதிக்கு சரியான வேட்பாளர் தனி மனித நேர்மை, படிப்பறிவு ஆகியவை நிரம்பிய நரசிம்மன்தான் என்பது வேறு என்ற வகையில் உயரிய நடைமுறைகள் வழக்கத்திலிருந்த காலகட்டம் அது.
அதுமட்டுமன்றி, தந்தையும் மகனும் ஒரே வீட்டில் குடியிருந்தபோதும் அவர்களது அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பது அதைவிட சுவாரஸ்யமான விஷயம். 1959-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் சி.ஆர். நரசிம்மன் தனது வீட்டில் முன் அறையில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தபோது அவரது தந்தை ராஜாஜிக்கு ஒரு தந்தி வருகிறது. எம்.ஆர். மசானி, என்.ஜி. ரங்கா ஆகிய இருவரும் அனுப்பிய அந்தத் தந்தியில் தாங்கள் மறுநாள் சென்னை வர இருப்பதாகவும் அச்சமயம் ராஜாஜியை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நரசிம்மனுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள்.
அந்தத் தந்தியை வீட்டின் உள்ளே இருந்த தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு கிருஷ்ணகிரி தொகுதிக்கு பணி நிமித்தம் நரசிம்மன் சென்றுவிடுகிறார். இரண்டு நாள்கள் கழித்து கிருஷ்ணகிரியில் பத்திரிகையைப் புரட்டியபோதுதான் நரசிம்மனுக்குப் புதிதாக சுதந்திரா கட்சி எனும் ஓர் அரசியல் கட்சியைத் தனது தந்தை ராஜாஜி உருவாக்கிய செய்தி தெரிய வருகிறது. அதாவது, ஒரே வீட்டில் குடியிருந்து வரும் தனது மகன் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினர், எம்.பி. என்ற வகையில் காங்கிரûஸ எதிர்த்து கடுமையான அரசியலை நடத்தி வந்த தனது நடவடிக்கைகள் தெரிய வேண்டியதில்லை என்று ராஜாஜியும் கருதினார்.
நரசிம்மனும் சரி, சுதந்திரா கட்சியின் தலைவர்கள் சிலர் அவரை அக்கட்சிக்கு அழைத்தபோது மறுத்துவிட்டார். 1962-ம் ஆண்டில் அவர் அதே கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு திமுக வேட்பாளர் க. ராசாராமிடம் தோல்வியைத் தழுவினார். தமிழகத்தில் காங்கிரஸின் தீவிர எதிர்ப்பாளரான ராஜாஜியின் மகன் எம்.பி. டிக்கெட் பெற்றது காமராஜரினால்தானே தவிர, அவரது தந்தையின் சிபாரிசால் அல்ல. ஆகவே, குடும்ப அரசியலுக்கு மேற்கோளாக ராஜாஜியை முதல்வர் கருணாநிதி சுட்டிக்காட்டி இருப்பது சரியல்ல.
அடுத்து, இன்னொரு சம்பவம். ராஜாஜியின் மற்றொரு மகன் சி.ஆர். கிருஷ்ணசாமி. இந்து பத்திரிகையின் உதவி ஆசிரியர் பணியில் இருந்தார். அப்பொழுதெல்லாம் இரவு பணி முடிந்து ரிக்ஷாவில்தான் அவர் வீட்டிற்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் நள்ளிரவு ரிக்ஷா கிடைக்காததால் பொடி நடையாக, மாம்பலம் பசுல்லா சாலையிலுள்ள தங்கள் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார் கிருஷ்ணசாமி.
மவுண்ட்ரோடில் இரவு ரோந்துப் பணியிலிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அவரை நிறுத்தி விசாரித்து, சந்தேகத்தின் பேரில் அவரை மவுண்ட் ரோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். வீட்டு விலாசத்தை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் இது முதல்வர் ராஜாஜியின் விலாசம் எனக் கூறி மேலதிகாரியிடம் விசாரிக்க, முதல்வர் மகன் சி.ஆர். கிருஷ்ணசாமி இந்து பத்திரிகை உதவி ஆசிரியர் எனும் உண்மை புலப்பட்டது.
சி.ஆர். கிருஷ்ணசாமி தன்னை "இந்து' பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்று சொல்லிக் கொண்டாரே தவிர, முதல்வரின் மகன் என்று குறிப்பிடவே இல்லை. அந்த சப்-இன்ஸ்பெக்டர் ஏன் முதலிலேயே அந்த உண்மையைக் கூறவில்லை என்று கேட்டபோது, சி.ஆர். கிருஷ்ணசாமி சொன்ன பதில்~ "இந்து' பத்திரிகையின் உதவி ஆசிரியர் என்கிற பதவி நிரந்தரமானது. கௌரவமானது. முதல்வரின் மகன் என்பது அப்படியில்லை!'.
சப் இன்ஸ்பெக்டருக்கும், கான்ஸ்டபிளுக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. வலியப் போய் வம்பை விலைக்கு வாங்கி விட்டோமோ என்று கருதினர். கிருஷ்ணசாமி மறுத்தும், விடாப்பிடியாக அவரை போலீஸ் ஜீப்பில் முதல்வரின் வீடு வரை கொண்டு போய் விட்டு விட்டு வந்தார் சப்-இன்ஸ்பெக்டர். மாடியில் விழித்திருந்து படித்துக் கொண்டிருந்த முதல்வர் ஜன்னல் வழியே ஒரு போலீஸ் ஜீப்பில் தனது மகன் வந்திறங்கியதைப் பார்த்திருக்கிறார். காலையில் முன்னிரவில் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்து கொண்டு தலைமைச் செயலகம் சென்ற பின் போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து போலீஸ் வாகனத்தை உபயோகிக்க உடந்தையாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என கேட்டிருக்கிறார்.
சந்தேகக் கேஸில் ஸ்டேஷனுக்குப் பிடித்துக் கொண்டு வரப்படும் குற்றவாளி தரத்திலானவர்களை லாக்கப்பில் தள்ளுவதும், தவறாகக் கொண்டு வரப்படும் கண்ணியமானவர்களை நடுநிசியில் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு போலீஸ் ஜீப்பில் கொண்டு போய் விடுவதும் வழக்கத்திலிருக்கும் நடைமுறையே என முதல்வருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
கொள்கை ரீதியாக ராஜாஜியுடன் கடுமையாக மோதிய பெரியார், காமராஜர் போன்றவர்கள்கூட அவரது நேர்மையையும், தன்னலமற்ற பொது வாழ்க்கையையும் சந்தேகித்ததும் இல்லை, குறை கூறியதும் இல்லை. ராஜாஜியின், நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பதுதான் முதல்வர் கருணாநிதியின் நோக்கமாக இருக்கும் போலிருக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராயிருந்தபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் அப்துல் மஜீத், அவர் ஒருமுறை அலுவல் நிமித்தம் விருதுநகர் சென்றபோது, காமராஜரின் இல்லத்திற்கு சென்று அன்னை சிவகாமி அம்மையாரை சந்தித்திருக்கிறார். அச்சமயம், காமராஜரின் சகோதரி தண்ணீர்க் குடத்துடன் வந்திருக்கிறார். அமைச்சர் உங்கள் வீட்டிற்கு தனியாக குடிதண்ணீர் இணைப்பு கிடையாதா எனக் கேட்க, இல்லை என்ற பதில் வந்துள்ளது.
அன்றைய நிலையில் தனி வீடுகளுக்கு குடிதண்ணீர் இணைப்பு இல்லாமல் எல்லாருமே பொதுக் குழாய்களில் தெருக்களில் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் நடைமுறையே இருந்தது. விருதுநகர் நகராட்சியில் நிர்வாக ஆய்வு செய்த அமைச்சர், ஆணையரை அழைத்து முதல்வர் காமராஜரின் வீட்டிற்கு ஒரு தனி குடிதண்ணீர் இணைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அடுத்த முறை விருதுநகர் சென்ற காமராஜர் தனது வீட்டிற்கு குடிதண்ணீர் இணைப்பு தரப்பட்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்தார். விவரங்களைக் கேட்டறிந்தார். சென்னை திரும்பிய பின் மஜீத்தை அழைத்து, ""நீங்களே விதியை மீறி ஒரு குடிதண்ணீர் இணைப்பை எங்கள் வீட்டுக்குக் கொடுக்கச் சொன்னது, அதிகாரிகள் இனிமேல் தங்கள் இஷ்டத்திற்கு பல வீடுகளுக்கும் ஹோட்டல்களுக்கும் இணைப்பு கொடுக்க வழிவகுக்கும். இதனால் ஊழலும், தண்ணீர் தட்டுப்பாடும் உண்டாகும். நீங்களே அந்த இணைப்பை அகற்றிவிடச் சொல்லுங்கள்'' எனக் கூறினாராம்.
இதுபோன்று தன்னலமில்லா பொதுத் தொண்டு செய்யும் அரசியல் தலைவர்கள் நம்மிடையே வாழ்ந்த காலம் மாறி தான் தன் குடும்பம் என சுயநலத்தோடு அரசியல் நடத்தும் தலைவர்கள் நாடெங்கிலும் பெருகிவிட்டனர். தியாகத் தலைவர்கள் பற்றி இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும்வகையில் முழுவிவரங்களையும் தெரிவிக்காவிட்டாலும் அவர்களைப் பற்றி தவறான எண்ணம் உருவாகும் வகையில் அரைகுறை தகவலை மட்டும் எடுத்துரைப்பது சரியல்ல!
சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் அப்பழுக்கில்லாத பழைய தலைவர்களை உதாரணம் காட்டுவதன் மூலம் தனது செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முயலும் முதல்வரின் முயற்சிகள் ஏற்புடையதல்ல. இன்றைய தலைமுறைக்குக் கடந்தகால வரலாறு தெரியாது என்கிற தைரியத்தில் முதல்வர் இப்படிக் கூறுகிறாரோ என்னவோ?
- தினமணி கட்டுரை ( 11-06-2009) இருந்து.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment